20 Mar 2014

Love & Lovers

உறவுகளில் எந்த உறவு புனிதமானது என்று யாராவது  சொல்ல முடியுமா-?எந்த உறவும் புனிதம் என்று தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாட முடியாது...சூழ்நிலைகள்தான்  எல்லாவற்றையும் தீர்மாணிக்கின்றன என்பததான்  நிதர்சன உண்மை.

காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசி வரை வாழ முடியாத பல ஜோடிகளை நாம பார்த்து இருக்கோம்.
 பேப்பர்ல படிச்சி இருப்போம் காதலன் வீட்டு முன்  காதலி அல்லது கர்பவதி காதலி தர்ணா... என்று படித்து இருப்போம்... அப்படி தர்ணா இருந்து  அவனை  திரும்பவும் கல்யாணம் செய்துக்கொண்டவனிடம் எப்படி மனம் விட்டு பேசி சிரிக்க முடியும்? எப்படி அவனை  காதலுடன் பார்க்க  முடியும்... ச்சி தூ என்று தன்னை  ஒதுக்கியவனை எப்படி சேர்த்துக்கொள்ள  முடியும்....  ---??? ஆனால்  உலகம் பெரும்பாலான நேரங்களில்  அப்படித்தான் இருக்கின்றது...
 ச்சீ என்று ஒரு ஆண் சென்றாலோ... அல்லது பெண் சென்றாலோ? கெஞ்சிக்கொண்டு  பின்னே செல்வது  நடந்துக்கொண்டுதான் உள்ளது....  ஒரு கட்டத்துக்கு மேல் அது ஏற்ப்புடையது  அல்ல என்பது என் கருத்து.....

விதி படத்துல சொல்லறது போல ஆண்களில் எல்லாரும் யோக்கியபுருஷர்கள் அல்ல...  சின்சியராக காதலித்து விட்டு, வீட்டில் பிரச்சனை  அதனால் வேறு கல்யாணம் செய்துக்கொண்டேன் என்று எத்தனை  ஆண்கள் சொல்லி இருக்கின்றர்கள்...  அப்படி  பிரிந்த அத்தனை   பெண்களும் போராட முற்பட்டால்    தெரு தெருவாக பெண்கள்  போராட்டதில்  நிற்க  வேண்டியதுதான்...
 அன்பாய் பழகி விட்டு, உயிருக்கு உயிராய் பழகிவிட்டு, உடல் ரீதியாகவும் பழகிவிட்டு  ஒரு ஆண் தனக்கு  பிடிக்கவில்லை என்றாலோ.... ? அல்லது பெண் பிடிக்க வில்லை  என்றாலோ... திரும்புவும்  எனக்க வாழ்க்கை கொடு என்று மன்றாடி  வாழும் அடிமை வாழ்க்கையில்  எனக்கு உடன் பாடு இல்லை.... முடிந்த வரை சேர்ந்து வாழ முயற்சிப்போம் ஒரு கட்டத்தில்  எல்லை மீறி   போகும் போது நாம் அதில் இருந்து விடுவித்துக்கொள்வதுதான்  சிறந்த வழி.
 Lovers இரண்டு  பேரில் ஏதோ ஒரு  பிரச்சனையில் மனக்சப்பு என்று  வைத்துக்கொள்வோம்.... முடிந்தவரை அந்த பிரச்சனையை இரண்டு பேரும் சேர்ந்து சரி செய்ய இரண்டு பேருமே முனைய  வேண்டும்... அப்படி முடியவில்லை என்றால்  பிரிந்து விடுவது உத்தமம்.

சாலை சுங்கவரி கொள்ளை

தனியார்மயத்தின் இன்னுமொரு கொடிய கொள்ளைதான் சாலை சுங்கவரி. கத்தியைக் காட்டி வழிப்பறி நடப்பதைப் போலத்தான், நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் இந்த சுங்க வரியைக் காட்டி வழிப்பறி நடக்கிறது. அண்மையில் மகாராஷ்டிராவில் இத்தகைய வழிப்பறி சுங்கச்சாவடிகளை ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தாக்கி சூறையாடியதையடுத்து இந்தப் பகற்கொள்ளை விவகாரம் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது.சாலை சுங்கச் சாவடிகள்

மக்களின் குமுறலைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி : நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் சட்டபூர்வ வழிப்பறி நடத்தும் சுங்கச்சாவடிகளைத் தாக்கிச் சூறையாடும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவினர்.
நாட்டிலேயே முதன்முறையாக மகாராஷ்டிராவில்தான் 1995-இல் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி ஆட்சிக் காலத்தில் சாலைகள் தனியார்மயமாக்கப்பட்டன. தனியார் முதலாளிகள் சாலைகளை அமைத்துப் பராமரித்து, செலவிட்ட தொகையைக் கட் டணங்கள் மூலம் வசூலித்து முடித்த பின்னர், அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிப்பது எனும் “உருவாக்கு-பயன்படுத்து-ஒப்படை” என்ற இத்திட்டத்தின்படி, மகாராஷ்டிராவில் மொத்தம் 4,685 கி.மீ. தொலைவுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ. 15,200 கோடி மதிப்புடைய சாலை திட்டங்கள் இப்பகற்கொள்ளைக்காகவே உருவாக்கப்பட்டன.
இருப்பினும், சாலை உருவாக்கத்தில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள், சாலைஅமைக்கச்செலவிட்ட தொகை எவ்வளவு, ஒரு நாளைக்கு வசூல் எவ்வளவு, போட்ட முதலீட்டை இலாபத்துடன் திரும்ப எடுப்பதற்கான காலக்கெடு என்ன, எப்போது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்பதற்கான எந்த வரையறையுமின்றி இச்சுங்கவரி வசூல் கொள்ளை நாடெங்கும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. இது தவிர அரசு சுங்க மையங்களில் ஓட்டுப் பொறுக்கிகளின் பினாமிகளிடம் கட்டண வசூல் குத்தகைக்கு விடப்பட்டு அங்கேயும் இக்கொள்ளை கேள்விமுறையின்றித் தொடர்கிறது.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தனது ஊழியர்களைக் கொண்டு மும்பையின் 5 மையங்களில் ஜூன்-ஜூலை 2012 -இல் நடத்திய கணக்கீட்டின்படி, ஒப்பந்ததாரர் ரூ. 2,100 கோடி அளவுக்கு முதலீடு செய்துவிட்டு சாலை வரி மூலம் ரூ. 14, 524 கோடி அளவுக்கு 2017-க்குள் சுருட்ட முடியும் என்ற பட்டியலைப் பகிரங்கமாக அறிவித்தது. ஆனால் அரசாங்கம் இப்படி எந்த கணக்கையும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்க முன்வரவில்லை. காம்கோன் – ஜல்னா புறவழிச்சாலை மற்றும் மும்பை – புனே அதிவிரைவு நெடுஞ்சாலை ஆகியவற்றில் காலக்கெடு முடிந்த பின்னரும் வரி வசூலிப்பதையும், சாலை பராமரிப்பில் 60 சதவீத அளவுக்கே நடந்துள்ளதாகவும், அதேசமயம் அந்த ஒப்பந்ததாரர் போட்ட முதலீட்டுக்கும் மேலாக பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டியுள்ளதாகவும் மகாராஷ்டிராவின் பொதுக்கணக்குக் கமிட்டி 2013-இல் அளித்த அறிக்கை குற்றம் சாட்டியது. இதேபோல கிருஷ்ணகிரி – தொப்பூர் நாற்கர சாலைக்கு ரூ. 160 கோடி செலவிடப்பட்டதாகவும், இந்தச் சாலையில் சுங்கவரி மூலம் தனியார் நிறுவனத்துக்குச் சராசரியாக மாதத்துக்கு ரூ. 3 கோடி அளவுக்கு வசூலாவதாகவும், இத்தனியார் சுங்கத்துக்கு 25 ஆண்டுகால ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதென்றால், அடிக்கும் கொள்ளை எவ்வளவு என்றும் தமிழக லாரி உரிமையாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
2009-இல் பெங்களூர் – மங்களூர் நெடுஞ்சாலையில் இப்பகற்கொள்ளையை எதிர்த்து மறியல் போராட்டம் நடந்தது. 2012-இல் யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலையில் உ.பி. விவசாயிகளின் டிராக்டர் வண்டிக்குக் கூட வரி கேட்பதை எதிர்த்து போராட்டம் நடந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுங்கவரி தேவை என்பதை வலியுறுத்தி ஏற்கெனவே லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். ஆனாலும் தனியார்மயக் கொள்ளையே அரசின் கொள்கையாக உள்ளதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசு – தனியார் கூட்டு என்பது தனியார் கொள்ளைக்கானதுதான் என்பதையும், ஆளும் கட்சிக்கும் சாலை வரி வசூலிக்கும் ஒப்பந்ததாரர்களுக்குமிடையிலான கூட்டணியையும் இத்தனியார்மயமாக்கம் மீண்டும் மெய்ப்பித்துக் காட்டிவிட்டது. பகற்கொள்ளையே தனியார்மயத்தின் நியதியாகிவிட்ட நிலையில், இனி அதனைப் பறித்தெடுப்பதுதான் மக்களின் நீதியாக இருக்க முடியும்.

15 Mar 2014

தேவயானி போன்ற ஆளும்வர்கம்

ஜனவரி 9-ம் தேதி இந்தியாவுக்குத் திரும்பிய தேவயானி இந்திய வெளியுறவுத் துறையின் “வளர்ச்சி கூட்டிணைப்பு நிர்வாகத்தின் (Development Partnership Administraion)“ இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க் தூதரகத்தில் பதவி, அங்கு பிரச்சனை ஏற்பட்டதும் ஐநா ஊழியராக நியமனம், அதிலிருந்து திரும்பி வந்ததும் நிர்வாக பதவி என்று தேவயானி போன்ற ஆளும் வர்க்கத்தின் அதிகார தூதர்களுக்கு அனைத்து வசதிகளும் எளிதாகவே கிடைத்து விடுகின்றன.
அமெரிக்க நீதி மன்றத்தின் தீர்ப்பு தேவயானியின் குற்றம் குறித்து எதுவும் பேசவில்லை என்றாலும் அவரது தந்தை உத்தம் கோப்ரகடே தன் மகள் மீதான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்ய உதவிய இந்திய அரசு மற்றும் இந்தியர்களின் ஒத்துழைப்புக்கும், உதவிக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சங்கீதா ரிச்சர்ட் குடும்பத்தினரை பொய்யர்கள் என்று திட்டியிருக்கிறார்.
இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி சட்டங்கள் தற்செயலாக சாமானியர்களின் சார்பில் சில சமயம் இயங்குவது போல காண்பித்தாலும், ஆளும் வர்க்கங்கள் அவற்றை சீக்கிரமே மேன்மக்களுக்கு சாதகமாக சரி செய்து விடுவார்கள் என்பதை இது தெளிவாக்குகிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தெரிகிறது? சங்கீதா போன்ற சாமானியர்களுக்கு எங்கேயும் நீதி கிடைத்து விடுவதில்லை.  அமெரிக்க எஜமான்களும் இந்திய ஏஜெண்டுகளும் நடத்திய அக்கப்போர் சண்டையில் அவர் ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு சாமானிய இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு ஆதரவாகத்தான் அமெரிக்க, இந்திய ஆளும் வர்க்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. வீட்டு வேலை செய்யும் தொழிலாளிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பதிலாக, தேசப்பற்று என்ற பெயரில் ஆண்டைகளுக்காக கூக்குரலிட்டார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
சங்கீதா ரிச்சர்டை கொடுமைப்படுத்திய தேவயானியையும், அவரைப் போன்ற அதிகார வர்க்கத்தை விட்டுக்கொடுக்காத இந்திய அரசையும், இந்திய மக்களை ஒடுக்கியும், ஒடுக்குதலில் உதவும் இந்திய தரகர்களை உச்சி முகர்ந்தும் வரும் அமெரிக்க அரசையும் நாம்தான் தண்டிக்க வேண்டும், அம்பலப்படுத்த வேண்டும். இதன்றி சங்கீதா ரிச்சர்டுக்கோ இல்லை இந்திய மக்களுக்கோ நீதி கிடைத்து விடாது.