8 Apr 2015

ஆயுர்வேதம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
September 2010

 

விபரம் - ஜனனி ஜெயரட்ணராஜர

ஆதி கால மனிதன் இயற்கையோடு கைகோர்த்து வாழ்ந்தான்.ஆரோக்கியமும் இன்பமும் நிறைந்த அவன் வாழ்க்கையில் குறைகள் என்று ஏதும் இருக்கவில்லை. இருந்தால்‚ அதற்கான தீர்வும் இயற்கையிடமிருந்தே அவனுக்குக் கிடைத்தது. இயற்கையை ஆதாரமாகத் தழுவி வாழ்ந்த அக்கால மனிதன்‚ அவனது நோய் நொடிகளுக்கு இயற்கையிடமிருந்தே தீர்வுகளைப் பெற்றுக் கொண்டான். மிகச் சிறந்த மருத்துவமான இயற்கை மருத்துவம் அவ்வாறு தான் உயிர்பெற்றது. மனித உடலில் உருவாகும் நச்சுக்களை வெளியேற்றி‚ உடல் உறுப்புக்களை சுத்தம் செய்து இயற்கை வளங்களின் மூலம் உடலை ஆரோக்கியமாகப் பேணும் மூல மந்திர சாஸ்திரமே இயற்கை மருத்துவமாகும்.

மொழி‚ சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இன்று உலகில் ஆங்கில மருத்துவம்‚ சித்த மருத்துவம்‚ இயற்கை மருத்துவம் என பல்வேறு மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஓலைச் சுவடிகளிலும்‚ கல்வெட்டுக்களிலும் பொறிக்கப்பட்டு மகத்தான தன்மைகளைக் கொண்டு கி.மு 4000 ஆண்டு காலத்திலிருந்தே‚ குறிப்பாக இலங்கையிலும்‚ இந்தியாவிலும் பயன்பாட்டில் இருந்து வந்த "வாழ்க்கையின் விஞ்ஞானம்" (Science of Life) ஆயுர்வேதம் ஆகும்.

ஆயுர்வேதத்தின் தோற்றம் அதன் முதல் நூலான "சரக சம்ஹிதை" எனும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. அதில் இத்தத்துவம் உலகில் இருந்துள்ளது என்றும்‚ பிரம்மா பிரஜாபதிக்கும் வைத்தியர்களான அஸ்வினி குமாரர்களுக்கும் கற்றுக் கொடுக்க‚ அவர்கள் அதை இந்திரனுக்கும் கற்றுக் கொடுத்து இவ்வாறு முனிவர்கள்‚ தவசிகள்‚ ஞானிகள் வேதங்களின் ஒரு பகுதியாக ஆயுர்வேதத்தை உருவாக்கினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையினால்தான் பண்டைய நூல்களான புராணங்கள்‚ உபநிடதங்கள்‚ இராமாயணம்‚ மகாபாரதம்‚ திருக்குறள் மற்றும் சமண - சமய நூல்களிலும் ஆயர்வேதத்தைப் பற்றிய குறிப்புகளை நாம் காணக்கூடியதாக உள்ளது. 

ஆயுள் காக்கும் ஆயுர்வேதத்தின் குறிக்கோள்கள் 
1. நோயற்ற தன்மையைப் பேணுவது 
2. உடலிலுள்ள நோய்களை முழுமையாக அகற்றுவது

இந்த உலகை காற்று‚ வெப்பம் (உஷ்ணம்)‚ குளிர்ச்சி (சீதம்) ஆகிய முச்சக்திகளும் இயங்கச் செய்வது போலவே‚ எமது உடலை வாதம்‚ பித்தம்‚ கபம் எனும் தாதுக்கள் இயங்கச் செய்கின்றன. இத் தோஷங்களின் சமநிலை குழம்பும் போதுதான் உடலில் நோய்கள் உருவாகின்றன. 

இதைத்தான் நம் சொல்லின் வல்லனாம் வள்ளுவன்‚ 
"மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் 
வளிமுதலர வெண்ணிய மூன்று" என்று எடுத்துரைத்துள்ளார்.

வாதம்‚ பித்தம்‚ கபம் எனும் மூன்று தோஷங்களும் முறையே காற்று‚ சூரியன்‚ சந்திரன் ஆகியவற்றையே பிரதிபலிக்கின்றன. வாதம் என்றால் வாயு‚ பித்தம் என்றால் பித்தநீர்‚ கபம் என்றால் சளி. இவற்றை மனித உடலில் சமச்சீரான நிலைக்குக் கொண்டு வருவதே ஆயுர்வேத மருத்துவமாகும்.

ஆயுர்வேதத்திலும் இவ் உலகம் ஐந்து மூலப் பொருட்களால் ஆனது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம்! நிலம்‚ நீர்‚ நெருப்பு‚ காற்று‚ ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் மனித உடலில் மூன்று தோஷங்களாகவும்‚ ஏழு தாதுக்களாகவும்‚ மூன்று மலங்களாகவும் வெளிப்படுகின்றன. தோஷங்களுக்கென்று உடலில் தனி உறைவிடம் உண்டு. அவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான குணங்களும் உண்டு. இவை சேர்ந்தும்‚ தனித்தும் அறுபத்து இரண்டு (62) வழிகளில் நோய்களை உண்டாக்கக் கூடியவை.

ஆயுர்வேதத்திலுள்ள மூன்று தோஷங்களும் ரஜோ‚ தமோ‚ சாத்வ குணங்களைக் கொண்டும் பிரிக்கப்படுகின்றன. அதாவது வாதம் "ரஜோ" குணத்தையும்‚ பித்தம் "சாத்வ" குணத்தையும்‚ கபம் "தமோ" குணத்தையும் கொண்டதாகும். இக்குணங்கள் சமநிலையில் உள்ளபோது உடல் ஆரோக்கியமும்‚ ஆளுமை செய்யும் தோஷத்தைப் பொறுத்து உடலின் செயற்பாடுகளும் அமையும். உதாரணமாக கபம் எனும் தோஷம் அதிகரித்தவர்கள் தமோ குணத்தைப் போன்று மந்தத் தன்மை‚ செயலில் பின்னடைவு உள்ளவர்களாக காணப்படுவார்கள்.

ரஜோ‚ தமோ‚ சாத்வ ஆகிய முக்குணங்கள் மட்டுமல்லாது மூன்று தோஷங்களும் ஒருவரின் மன நிலையைப் பாதிக்கும் காரணத்தினாலேயே‚ ஆயுர்வேதத்தில் உடல் சிகிச்சையுடன் மன சிகிச்சையும் வழங்கப்படுகின்றது. ஆகையால்தான்‚ மருந்துகளை உட்கொள்ளும்முன் ஆயுர்வேத வைத்தியரைக் கண்டு‚ தோஷங்களின் பாதிப்பு என்ன என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும். பெரும்பாலும் ஆயுர் வேத வைத்தியர்கள்‚ ஒருவரின் தோற்றம்‚ நாடித்துடிப்பு‚ நடத்தை ஆகியவற்றைப் பார்த்தும் பரிசோதித்தும் தோஷத்தின் தன்மையைத் தெரிந்து கொள்வர்.

இயற்கையிடமிருந்து தன்னை அந்நியப் படுத்திய மனிதன்‚ மீண்டும் இயற்கையின் வரப்பிரசாதங்களைப் பெற முனையும் போது தடையாய் இருந்தது ஆயுர்வேதம் பற்றிய பழைமையான உள்ளுணர்வு (Ancient Perception). ஆயுர்வேத மருத்துவம் என்றாலே துர்நாற்றமும்‚ எண்ணைகளும்‚ கசப்பான மருந்துகளும் என்றிருந்த நிலையை மாற்றி‚ இன்று அவற்றிலுள்ள இயற்கையான நற்குணங்களைப் பேணுவதோடு மட்டுமல்லாமல் ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகவே (Pleasant Experience) இக்காலத்தில் சந்தைப்படுத்தப்படுகின்றது. ஆகவேதான்‚ தற்போது‚ இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியிலும் ஆயுர்வேத மருத்துவத்திற்கும்‚ ஆயர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கும் கிராக்கி (Demand) அதிகரித்துள்ளது.

சுருங்கக் கூறின்‚ ஆயுர்வேத மருத்துவம் என்பது நூறு சதவீதம் இயற்கையான மூலப்பொருட்களை மட்டுமே உபயோகித்து‚ விலங்குக் கொழுப்பு சில சமயங்களில் சேர்க்கப்பட்டும் பெருமளவில் சேர்க்கப்படாமலும்‚ இயற்கை எண்ணைகளிலிருந்து நறுமணத்தையும்‚ இயற்கையான பதப்படுத்தல்களையும் உபயோகித்து குறிப்பான வரையறைக்குட்பட்ட செயன்முறைகளின்படி தயாரிக்கப்படும் உன்னதமான பொக்கிஷமாகும்.

ஆயுர்வேதப் பொருட்களை தேர்ந்தெடுக்கும்முன்‚ ஒரு ஆயுர்வேத வைத்தியரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டிய தோஷம் எதுவென்று அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்‚ வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதியைப் பேணும் நற்பெயர் கொண்ட தரவகையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

ஆயுர்வேதப் பொருட்கள் வரிசையில் இன்று- அஸ்வகந்தா‚ கசீரபாலா‚ த்ரிபலா போன்ற சிகிச்சைக்கான வைத்திய எண்ணைகள் ( Treatment Oils). தாமரை மற்றும் மஞ்சள் ( Lotus & Saffron)‚ நீராம்பல் மற்றும் பாதாம் ( Water Lily & Almond)‚ மல்லிகை மற்றும் தேங்காய் ( Jasmine & Coconut) கலவைகளால் ஆன சருமத்தை தூய்மைப்படுத்தும் சவர்க்காரங்கள் ( Cleansing Bars). சருமத்திலுள்ள அடைக்கப்பட்ட நுண்ணிய துளைகள் ( Clogged Pores)‚ இறந்த உயிரணுக்கள் ( Dead Cells) ஆகியவற்றை அகற்றுவதற்காக வேம்பு ( Margosa)‚ வெட்டிவேர் ( Vettiver)‚ சந்தனம் ( Sandalwood) ஆகியவற்றிலான பசை ( Body Scrub). சருமம் ஈரப்பதனை ( Moisture) இளக்காதிருக்க உபயோகிக்கக் கூடிய செந்தாமரை ( Pink Lotus)‚ நீராம்பல் ( Water Lily) மல்லிகை ( Jasmine) போன்றவற்றைக் கொண்டு தயாரித்த உடற் பசை ( Body Lotion / Cream). மன உளைச்சல்‚ பதற்றம்‚ தலைவலி மற்றும் உடற் தசையில் ஏற்படும் வலியைப் போக்கத் தைலம் ( Peace Soothing Balm). களைப்பான‚ வீங்கிய கால்களின் வேதனையைத் தணிப்பதற்கான தைலம் ( Relax Foot Balm). உலர்ந்த‚ வெடித்த‚ மற்றும் களைத்த பாதங்களுக்குத் தேவையான புத்துணர்ச்சியைத் தரும் பச்சைப் புதினாப் பசை ( Green Mint Cooling Foot Relief) என மட்டுமல்லாது‚ இயற்கை மூலிகைகள் மற்றும் எண்ணைகளாலான‚ நிம்மதியான உறக்கத்தைத் தூண்டும் திரவியம் (Sleep Therapy - Pillow & Body Mist) என‚ பல்வேறு பொருட்கள் தற்போது இலங்கையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

அனைத்து தோஷங்களுக்கும் பொருந்தும் வகையில் சில ஆயுர்வேதப் பொருட்கள் இருப்பினும்‚ தனக்கான தோஷத்தைக் கண்டறிந்து‚ அதற்கேற்ற சிகிச்சையை ஆயர்வேத சித்தாந்தத்தின்படி பின்பற்றி‚ ஆயிரம் பொன்னிலும் மேலான ஆயுளை நீடித்து‚ நோய் நொடியில்லாமல் நலமாய் வாழ்வோம்!

- See more at: http://www.serendib.btoptions.lk/tamilshow.php?issue=9&id=197#sthash.a26VHRzb.dpuf

No comments:

Post a Comment