posted by sudar24 January 13, 2016 ஆரோக்கியம்
பல்வேறு வைரஸ் கிருமிகளால் வரும் பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் நிலவேம்பு கஷாயம் ஒரு நிச்சய தீர்வாக இருக்கும் என சித்த மருத்துவர்கள் கருதுகின்றனர்.
எல்லா வகை காய்ச்சலுக்கும் ஒரே தீர்வா?, இது எத்தனை தூரம் உதவியாக இருக்கும்?. இதை பாராசிடமால் போல் சுரம் வந்த பின் பயன்படுத்த வேண்டுமா?, சுரம் வராமல் தடுக்க உதவுமா?. இதனை தண்ணீருக்கு மாற்றாக பயன் படுத்தலாமா?. எத்தனை நாள் குடிக்க வேண்டும்?. ஒரு முறை குடித்த பின் எத்தனை மாத இடைவெளியில் தற்காப்புக்காக குடிக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கிறது.
இந்த நிலவேம்பு குடிநீரில் அப்படி என்னதான் இருக்கிறது?.
முதலில் கஷாயம்–குடிநீர் என்றால் என்ன என்று பார்போம்.
இன்றைக்கு ‘ஹெர்பல்’ டீ என்று சொல்கிறார்களே அதை போன்றதே கஷாயம்–குடிநீர்.
அதாவது சில மூலிகைகளை உலர வைத்து கரகர பொடியாக்கி அதனை கொதிக்கின்ற நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது.
மருந்தாக பயன்படுத்தும் பொழுது அந்த மூலிகையில் இருக்கும் மருந்து சத்து நீரில் வரும் வகையில் பொடித்து, ஊறவைத்து, கொதிக்கவைத்து, அதே நேரத்தில் அதில் இருக்கும் ஆவியாக கூடிய நறுமண பொருள் தப்பி செல்லாமல் மூடிவைத்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளுதல்.
நிலவேம்பு கஷாயத்தில் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய்புடல், கோரை கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் என்று 9 மூலிகைகள் உண்டு.
ஒவ்வொரு மூலிகைக்கும் சிறப்பான மருந்தியல் செயல் உண்டு. அவற்றின் கூட்டு செயல் சிறப்பானது.
அதாவது தனிப்பட்ட மூலிகைகளின் பயன்பாட்டில் இருக்கும் தன்மையை காட்டிலும், சில மூலிகைகளை சேர்த்து செய்யும் பொழுது மருந்தின் செயல் தன்மை கூடுவதுடன், சில மூலிகைகளில் உள்ள விரும்பத்தகாத பண்பும் சமன் செய்யப்படும், மருந்தின் குறைந்த அளவில் கூட நோய் நீக்கும் தன்மை சிறப்பாக இருக்கும்.
சுரம் என்பது பொதுவாக வாதம், பித்தம், கபம் என்று சொல்லும் மூன்றில் பித்தம் – வெப்பம் மிகுதியினால் வரும். எனவே அதனை சமன்படுத்தும் மருந்து குளிர்ச்சியை தருவதாகவும் புளிப்பு, உப்பு, காரம் நீக்கிய கசப்பு, இனிப்பு சுவை மிகுந்ததாக இருத்தல் வேண்டும்.
அதே நேரத்தில் வாத மிகுதியால் ஏற்படும் வலியை குறைப்பதாகவும் இருத்தல் வேண்டும்.
வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், மிளகு, பற்பாடகம் முதலியவை வெப்பத்தை குறைக்கும் பித்த சமனிகள். கோரைக்கிழங்கு, சுக்கு இரண்டும் வாதத்தின் வெளிப்பாடான வீக்கம் வலியை போக்கும். நிலவேம்பு, பேய்புடல் ஆகியவை பித்தம் மற்றும் கபத்தை சீராக்கும்.
இவ்வாறு வாதம், பித்தம், கபம் மூன்றையும் சீர்படுத்தும் தன்மையால் நிலவேம்பு கஷாயம் சிறப்பு வாய்ந்தது.
ஒவ்வொரு மூலிகைக்கும் சிறப்பான மருந்தியல் செயல் உண்டு.
அதனை பற்றி தெரிந்துகொள்வோம்.
நிலவேம்பு 2 அடி வரை வளரும் செடி வகையை சார்ந்தது, இதன் இலை மிளகாய் செடியின் இலையை போன்ற வடிவத்தில் இருக்கும். பாம்பின் நாக்கை போன்ற வடிவில் மலரின் இதழ் இருக்கும்.
கசப்புகளின் அரசன் என்று வர்ணிக்கப்படும் இந்த செடியின் தண்டு நான்கு பக்கங்களை உடையதாக இருப்பதால் எளிதில் இனம் காண முடியும்.
வேம்பு என்ற சொல் கசப்பு என்பதை குறிக்கும். எனவே இதனை வேப்ப மரத்துடன் தொடர்புபடுத்தி மரம் என குழம்பக்கூடாது.
அண்மைக்கால ஆய்வுகள் நிலவேம்பு பல்வேறு வைரஸ் கிருமிகளை கொல்லும் என்றும், ஈரல் பாதிப்பை தடுக்கும் தன்மையும், குருதி சர்க்கரை இரத்த அழுத்தம் இரண்டையும் குறைக்கும், பசியின்மையை போக்கும் மருந்தியல் செய்கை உடையது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சுரத்தை கட்டுப்படுத்தும் செய்கையும் முதன்மையானது.
வெட்டிவேர், விலாமிச்சை வேர் இரண்டும் பொதுவாக மணற்பாங்கான இடங்களில் மண் அரிப்பை கட்டுப்படுத்த உதவும், 2 அடி வரை வளரும் தன்மையும் ஆண்டு முழுமையும் வளரும் புல் வகை தாவரங்கள்.
உடலுக்கு குளிர்ச்சி தருவதற்காக தட்டி, பாய், விசிறி செய்து பயன்படுத்துவதுடன் வெயில் காலத்தில் மண் பானையில் நீரில் வெட்டிவேரை போட்டு வைக்கும் பொழுது அதில் உள்ள நறுமண எண்ணெயின் கிருமி நாசினி தன்மையாலும் குளிர்ச்சி தரும் தன்மையாலும் பயன்படுத்துவது நமக்கு தெரியும்.
இந்த காரணத்தினாலே சுரம் போக்கும் பித்தத்தை சீர் செய்யும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
விலாமிச்சை வேர் என்பது மலையாளத்தில் வெட்டிவேரின் பெயர் என்பதால் ஒரே மூலிகையை இரண்டு முறை சேர்க்கிறார்களோ என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு.
சந்தனமும் குறிப்பாக அதன் வைரம் பாய்ந்த கட்டை மற்றும் வேர் பகுதிகளில் உள்ள நறுமண எண்ணெயின் கிருமி நாசினி தன்மையாலும் குளிர்ச்சி தரும் தன்மையாலும் சுரம் நீக்கும் தன்மை மற்றும் நிலவேம்பு, பேய்புடல் ஆகிய மூலிகைகளின் மிகுந்த கசப்பு தன்மை மருந்து பருகுவதை வெறுக்கும் நிலையை போக்கும்.
பேய்புடல் வேலி ஓரங்களில் வளரக்கூடிய ஏறு கொடி வகையை சார்ந்தது. குஜராத் போன்ற மாநிலங்களில் இதன் காய் ‘படோலம்’ என்ற பெயரில் சமைத்து சாப்பிடப்படும்.
இந்த இலை பித்தத்தை சீராக்கும்.
வீக்கத்தையும் உடல் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியையும் போக்கும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கும். சில மருந்து செய்கின்ற நிறுவனங்கள், விலை குறைவு என்ற காரணத்தினால் இதற்கு பதில் பாகற்காய் கொடியை பயன்படுத்துகிறார்கள்.
சுக்கு ஒவ்வொருவருக்கும் தெரிந்த வீட்டு மருந்து என்றே சொல்லலாம். சுக்கு இல்லாத கஷாயம் இல்லை என்ற பழமொழியும் சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற சொல்லாடலும் நமக்கு தெரியும்.
வாதத்தை சமன்படுத்தும்.
வீக்கம் வலியை நீக்கி செரிமானத்தை சீர்படுத்தி, சுரத்தில் வரும் உடல் வலி, தலை வலி ஆகியவற்றை போக்கும்.
மிளகும் நமக்கு நன்றாக தெரியும். சித்த மருத்துவத்தில் பித்த சமனிப்பொருள் என்று விவரிக்கப்படும் நம் தினசரி உணவில் பயன்படுத்தப்படும் பொருள். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு அருந்தலாம் என்று போற்றப்படுகிறது.
இன்றைய ஆய்வில் இதில் உள்ள ஜீவீஜீமீக்ஷீவீஸீமீ என்ற வேதிப்பொருள் கிருமியை கொல்லும் செயலுடன், பிற மருந்துகளை உட்கிரகித்து குறைந்த அளவிலேயே மருந்துகள் நன்றாக செயல்பட செய்யும் தன்மை உடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
பற்பாடகம் தரையில் படரும் சிறு செடி நூல் போன்ற மெல்லிய தண்டு உடையது. கிருமி நாசினி செய்கையும், சுரம் அகற்றி செய்கையும் உடையது. ஈரலை பாதிக்கும் பல்வேறு நச்சு பொருட்களில் இருந்து பாதுகாக்கும்.
கோரை கிழங்கு விவசாயிகளால் பெரிதும் வெறுக்கப்படுகின்ற புல்லானாலும் சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்ற கிழங்கை உடையது. வீக்கம், வலியை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடையது.
எப்படி பயன்படுத்துவது?
வைரஸ் நோயினால் சுரம் தொற்று நோயாக பரவும் காலத்தில் நோய் தடுப்பிற்காக நிலவேம்பு கஷாயத்தை தினசரி இரண்டு வேளை உணவுக்குப்பின் குறைந்தது 5 நாட்களுக்காவது தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
சுரம் வந்த பின் பயன்படுத்துவதாக இருந்தால் புளூ சுரமாக இருந்தால் ஒரு நாளுக்கு 3 வேளை பயன்படுத்த வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்துவதே நல்லது.
பொதுவாக சிறந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் நிலவேம்பு கஷாய சூரணம், ஒன்றிரண்டாக இடிக்கப்பட்டு பொடியாக எளிதில் நீரில் கொதிக்க வைக்கும் பொழுது கஷாயமாக மாறும் தன்மையில் இருக்கும்.
2 கிராம் பொடிக்கு 100 மில்லிலிட்டர் நீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக கொதித்த பின்னர் வடிகட்டி பருக வேண்டும்.
ஒரு முறை கொதிக்க வைத்ததை மீண்டும் கொதிக்க வைக்க கூடாது.
தயாரித்த மூன்று மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். மூடி வைக்காமல் கொதிக்க வைத்தாலும், அதிகம் கொதிக்க வைத்தாலும் மருந்தில் உள்ள நறுமண வேதியியல் பொருட்கள் மருந்தில் தங்காமல் ஆவியாக வெளியேறும், மருந்தின் செயல்தன்மை குறையும்.
எல்லா வகை காய்ச்சலுக்கும் ஒரே தீர்வா?
நிலவேம்பு கஷாயம் எல்லா வகை காய்ச்சலுக்கும் ஒரே தீர்வா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
குடற்சுரம் என்னும் டைபாய்டு காய்ச்சலில் சித்த மருத்துவத்தில் பிற மருந்துகள் உண்டு.
நிலவேம்பு கஷாயம் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது குடல் புண்ணை அதிகப்படுத்தும். வயிற்றில் எரிச்சலை உண்டாக்கலாம்.
மழைகாலங்களில் வைரஸ் கிருமிகளால் வரும் புளூ, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் முதலிய சுரத்தினால் பலரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு முறை (8 ஆண்டுகளுக்கு முன்பு ) நானும் வைத்யா உஸ்மான் அலியும் குஜராத்தில் பவநகர் பகுதியில் உள்ள ஒரு பெரிய மருந்து நிறுவனத்தின் மேலாண் இயக்குனருடன் பேசிக்கொண்டு இருந்தோம். ‘‘எங்கள் மருந்து நிறுவனத்தில் பல ஊழியர்கள் சுரத்தால் பாதிக்கப்பட்டு விடுப்பு எடுத்துள்ளார்கள். எஞ்சிய ஊழியர்கள் சுரத்தால் பாதிக்கப்படாமல் இருக்க சித்த மருந்துண்டா’’ என்று அவர் கேட்டார்.
உடனடியாக அருகாமையில் இருந்த நாட்டு மருந்துக்கடைக்கு சென்று தேவையான மூலிகை சரக்குகளை வாங்கி அங்கேயே கஷாயம் காய்ச்சி 3 நாட்கள் 300 ஊழியர்களுக்கு பருக கொடுத்தோம். மறு நாளிலிருந்து சுரத்தினால் விடுப்பு எடுப்பது குறைந்தது. பின்னர் மேலும் சில தொழிற்சாலைகளில் வருடம் தோறும் இரு முறை கொடுப்பதை வழக்கமாக்கி இருக்கிறோம். அங்கெல்லாம் சுரம் வரும் காலங்களில் ஊழியர்கள் சுரத்தால் பாதிக்கப்படாமல் உற்பத்தி அதிகமாவதை தொழிற்சாலை மேலாண்மையினர் சொல்வது உண்டு. நோய் தடுக்கவும், தீர்க்கவும் உதவும்.
இதனை தண்ணீருக்கு மாற்றாக பயன்படுத்தலாமா?
ஒரு சிலர் ஆறு மாத காலமாக இதனை தண்ணீருக்கு மாற்றாக பயன் படுத்துவதாக பெருமையுடன் சொல்கிறார்கள்.
இது நிச்சயம் தவறு. அளவுக்கு மிஞ்சினால் குருதி சர்க்கரை குறைவு, ரத்த அழுத்த குறைவு முதலிய எதிர்வினையை ஏற்படுத்தும். இதனால் தலைசுற்றல், மயக்கம் முதலியன ஏற்படலாம்.
ஊரில் சுரம் பலருக்கும் ஏற்படும் காலத்திலும், பருவகால மாற்றத்தின் பொழுது, குறிப்பாக ஆடி மாதம், ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வைரஸ் சுரம் வராமல் இருக்க மூன்று நாள் காலை, மாலை இருமுறை உணவுக்குப்பின் குடிக்க வேண்டும்.
ஒருமுறை குடித்த பின் ஆறு மாத இடைவெளியில் தற்காப்புக்காக குடிக்க வேண்டும்.
நீரை தேற்றான் கொட்டையை இடித்து போட்டு சுத்தம் செய்யலாம், நெல்லிமர கட்டையும் நீர் தொட்டிகளில் போட்டு நீரை சுத்தம் செய்யலாம். இவை இரண்டும் நீரின் கடினத்தன்மையை போக்குவதுடன் நோய் கிருமிகளையும் கொல்லும்.
சீரகம் சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறிய நீரை பருகலாம்.
நிலவேம்பை (கஷாயம்) பற்றிய என்னுடைய கேள்வி தொடர்கிறது.
தமிழக வனத்துறை எந்த சித்த ஆயுர்வேத மருந்து செய் நிலையங்களுக்கும் சந்தனம் தராத நிலையில் டாம்ப்கால், இம்ப்காப்ஸ், காந்தி கிராமம் அறக்கட்டளை நடத்தும் எல்.எஸ்.எஸ். நிறுவனம் ஆகியவை மட்டுமே முறைப்படி சந்தனம் பெற உரிமை பெற்று பயன்படுத்துகின்றன.
பல நிறுவனங்கள் சந்தனம் சேர்க்காமலேயே நிலவேம்பு குடிநீர் பொடி தயாரிக்கிறார்கள்.
அதுபோல பேய்புடல் சேர்க்காமல் பாகல் இலையை பயன்படுத்துகிறார்கள்.
சிலர் நிலவேம்பு செடியின் பொடியை மட்டுமே நிலவேம்பு குடிநீர் என்று விற்கிறார்கள். லேபிலில் எல்லா 9 மூலிகைகளின் பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும், தயாரிப்பு உரிமை எண் குறிப்பிடாமல் இருந்தாலும் பொதுமக்கள் வாங்க வேண்டாம். போலி மற்றும் தரம் குறைந்த மருந்தால் நோய் தடுப்பும் நோய் குணமும் கிடைக்காது.
நிலவேம்பு குடிநீர் விலை ஏன் அதிகம் :
நிலவேம்பு குடிநீர் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் சந்தனம் திண்மையான மைய கட்டை சேர்ப்பதுதான். சிலர் லாப நோக்குடன் குறைந்த விலையுடைய மென்கட்டையை பயன்படுத்துகிறார்கள். இரண்டிலும் உள்ள வேதியியல் கூறுகள் வெவ்வேறு என்பது ஆய்வு மூலம் புலனாகும். இந்த சூழலில்தான் காலத்திற்கு ஏற்ப சித்த மருந்துகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தொடர் ஆய்வு தேவை என்பது என் போன்றோர் குரல்.
தமிழக அரசு, இது போன்ற நெருக்கடி நிலையிலாவது சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை வழங்குவது நன்றே.
வெவ்வேறு சுரத்திற்கும் சித்த மருத்துவத்தில் தனித்தனி நோய் போக்கும் மருந்தும் வழிமுறையும் இருப்பதால் சுய மருத்துவம் ஒரு நாளுக்கு மேல் மேற்கொள்ளாமல் மருத்துவரை ஆலோசித்து நோயின்றி வாழுங்கள்.
டாக்டர் டி.திருநாராயணன்
(பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மைய செயலாளர்
சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் ஓய்வு)
