கத்தார் நாட்டில் தொழில்புரிபவர்களிடம் “free விஸா” என்ற சொல் மிகவும் பரீட்சயமானது. மத்திய கிழக்கு நாடுகளில் கத்தாரை நோக்கி இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலுள்ளவர்கள் தொழில் புரிவதற்காக பெரும்பாலும் இந்த “free விஸா” என்ற பெயரில் படையெடுப்பதை அடிக்கடி பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
சஊதி அரேபியா, குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற வளைகுடா நாடுகளிலும், மேலும், ஐரோப்பிய நாடுகளிலும் பணி புரிபவர்கள் கூட கத்தார் சென்று
தொழில் செய்வதற்க்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்ப்பதுடன், இவ்விசாவின் மூலமாக கத்தார் சென்று தொழில் தேடுவதையும் அவதானிக்கலாம்.
உலகில் பெற்றோல், கேஸ் உற்பத்தியில் முதன்மையான நாடுகளில் ஒன்றான இந்நாட்டின் அரசு 2030 ம் ஆண்டினை “துரித அபிவிருத்திக்கான” இலக்காகக் கொண்டு கல்வி, சமூக, பொருளாதார, மனித வள, சுற்றுச்சூழலினை உயர் தரத்தில், எழுச்சிமிக்கதாக மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்த வகையில், உரிய தராதரங்களுக்கேற்ப தொழில் பெறுவதற்கான துறைகள் இங்கு அதிகமாகவே காணப்படுகின்றது.
free விசாவில் வந்து தொழில் தேடுபவர்களின் நன்மை கருதி முக்கியமான சில விடயங்களை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
கத்தார் நாட்டில் பின்வரும் விசாக்கள் அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன
1.WORK visa 2.BUSINESSES visa 3.VISIT visa 4.FAMILY visa 5.TOURIST visa.
ஒரு கம்பனி தமது தேவைக்கேற்ப தொழில் அமைச்சிடம் விண்ணப்பித்து, விசாக்களைப் பெற்று அவை தாமாகவும், சில கம்பனி உரிமையாளர்கள் முகவர்கள் மூலமாகவும் விநியோகிப்பர்.
தொழில் இரீதியாக Work விசா மூலமே அதிகமானவரகள் வருகை தருவதனால் அது பற்றிய அறிமுகம் மிகவும் முக்கியமானது.
கம்பனியொன்று தனது ஆளணித் தேவையினைப் பொறுத்து, தம்மிடமுள்ள தொழிலுக்கேற்ப உரியவர்களை, உரிய தொழிலுக்கு அமர்த்துவதற்க்காகப் பயன்படுத்தும் விசாவே Work விசாவாகும். இது பெரும்பாலும் ஐந்து வருடங்களைக் கொண்டது. விசாப் பெற்றுக் கொண்ட தினத்திலிருந்து 6 மாத காலத்திற்குள் ஒருவர் கத்தாரினுள் நுழைய முடியும்.
பின்பு நாட்டினுள் நுழைந்த தினத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் இவ்விசா செல்லுபடியாகும். முதல் மூன்று மாத காலம் தவிர்த்து, அடுத்துள்ள மூன்று மாத காலமும் விசாவினைப் பெற்றவர் உரிய (இகாமா / RP) வதிவிடச் சான்றிதழைப் பெறாவிட்டால், நாளொன்றுக்கு அவர் 10 ரியல் வீதம் (கராமா /penalty) தண்டப்பணம் செலுத்துதல் அவசியம். ஆறு மாத காலமும் நிறைவடைந்து RP பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் நாட்டினுள்ளிருப்பது சட்ட விரோதமாகும்.
Work விசா மூலம் தொழில் பெறும் ஒருவர் வதிவிடச் சான்றிதழை (RP) பெற்ற பிறகு கம்பனியில் ஒரு வருடத்திற்குப் பணி புரிந்த பிறகே, அவரால் வேறு கம்பனிகளுக்கு மாற்றம்
பெறுவது பற்றிச் சிந்திக்க முடியும். (கம்பனி கஃபீல் அவர்களின் ஒப்புதல் அவசியம்)
Free விசா என்ற சொல் இங்கு நடை முறையிலில்லை. சில கம்பனிகள் விசா கோட்டாக்களைப் பெற்று வைத்துள்ளன. முகவர்கள் பணம் செலுத்தி அதை உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கின்றனர். (விசா வுக்கான செலவு 300 ரியல்களே) ஆனால். எம் சகோதரர்கள் 1700 முதல் 2250 ரியால் வரை பணம் கொடுத்துப் பெறுகின்றனர். கம்பனியின் பெயரில் ஒரு தொழில் குறிப்பிடப்பட்டே அந்த Work விசா விநியோகிக்கப்படுகின்றது.
விசாவினை வழங்கிய கம்பனி தொழிலுக்கு உத்தரவாதம் கொடுக்காமல் உரிய காலத்திற்குள் தொழிலினை இங்குள்ள தொழில் சந்தைகளில் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வாயிப்பை அவை வழங்குகின்றன. (நாட்டுக்குள் நுழைவதற்காக தொழில் உத்தரவாதமின்றி அவர்களால் கொடுக்கப்படும் (Work Visa) Free விசா என்று நடைமுறையில் எம்மால் அழைக்கப்படுகின்றது).
தொழில் தேடுபவர்கள் சில தகவல்களை அறிந்து வைத்திருத்தல் பொருத்தமாக இருக்கும்..
ஒன்று:
தான் விசா பெற்று வந்த கம்பனி முகவரிடமிருந்து NOC (No objection) letter, Computer Card பெற்றுக்கொள்வதுடன், இரு பத்திரங்களிலுமுள்ள ஒப்பம் சரியானதா என்பதை சரி பார்த்துக் கொள்ளல் வேண்டும். ஏதும் வித்தியாசமிருப்பின் விசா மாறும் போது Immigration Department ஏற்றுக்கொள்ளாது.
இரண்டு:
நான்கு விதமாக தொழில் தேடும் நடவடிக்கைகளில் எம்மவர்கள் ஈடுபடுகின்றனர். ஒன்று வெப் தளங்களிலுள்ள விளம்பரங்கள் மூலம், இரண்டு பத்திரிகை விளம்பரப்படுத்தல் மூலம். மூன்று சுய விபரத்தினை (CV) பிரதி செய்து பல கம்பனிகளுக்கு விநியோகித்தல் மூலம் நான்கு சிபாரிசின் அடிப்படையில்.
இதில் நான்காவது வகையில் தொழிலினைத் தேடுபவர்கள் உரிய தராதரமிருந்தால், இலகுவில் பெற்றுக் கொள்வர். மூன்றாவது வகை மூலம் தேடும் போது பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர், 1500 முதல் 2500 வரையான சுய விபரத்தினை (CV) பிரதி செய்து, தொழில் தேடியதாக சிலர் தங்களது அனுபவத்தினைப் பகிர்ரும் போது, அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இரண்டாவது வகையில் தேடுபவர்கள் கூடுதலான தொடர்புகளையும் தொழிலினைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினையும் பெறுவர். முதலாவது வகையில் தேடுபவர்கள் வெப் தளங்களில் தங்களைப் பதிவு செய்வதோடு நின்று விடாமல் கம்பனிகளின் விளம்பரங்களைப்பெற்று தொலைபேசியூடாகத் தொடர்புகளைப் பேணும் போது வாய்ப்புமுண்டு.
மூன்று:
Web தளங்கள் மூலம் தொழிலினைத் தேடுபவர்களுக்கு www.careerAge.com , www.qatarliving.com, www.jobmaas.com, www.addsdoha.com, www.qatar.duniya.com, www.qatargul.com போன்ற வெப் தளங்கள் உதவியாக இருக்கும்.
இதில் careerAge மூலம் எமது நாட்டிலிருந்தும் கூட தேடிக்கொள்ளக்கூடிய வாய்ப்பிருக்கிறது. அந்த வெப் தளம் ஆசிய நாட்டவர்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பல கத்தார் கம்பனிகள் அதிகமாக விளம்பரப்படுத்துகின்றன.
நான்கு:
நேர்முகத் தெரிவின் போது தான் என்ன தொழிலினை மையமாகக் கொண்டு தமது சுய விபரத்தினை (CV) தயாரித்துள்ளாரோ அதற்க்கேற்ப தமது அனுபவத்தினையும் செயற்பாட்டினையும் விபரித்தல் அவசியம். வெளிநாட்டு அனுபவத்தினை கம்பனிகள் எதிர்பார்க்கும். அதற்கேற்ற விதமாக எம் பதில்கள் இருக்கும் போது, வாய்ப்பு அதிகம் தான். கூடுதலான சம்பளத்தினை எதிர்பார்த்து கிடைக்கப்பெற்ற சகல தொழில்களையும் தாமதிக்க விட்டு ஈற்றில் ஏதுமின்றி பெனால்டி கட்டி நாடு திரும்பிய வரலாறுமுண்டு .
பல நேர்முகத்தேர்வுகளைச் சந்திக்க வேண்டி வரும். அவை ஒவ்வொன்றும் சிறந்த அனுபவத்தினைக் கொடுப்பதுடன், தான் விட்ட தவறினை திருத்தி, அடுத்த இன்டர்வ்யூக்கு தயார்படுத்த மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
ஐந்து:
மனதில் தைரியத்தினை வரவழைத்துக் கொண்டு, தமக்கான உணவு இங்கு கிடைக்குமென்ற நம்பிக்கையினை உறுதியாக்கி, இறைவனைப் பிரார்த்தித்து முயற்சி செய்வதன் மூலம் தாம் விரும்பும் தொழில் கிடைக்க வாய்ப்பு நிறையவே இருக்கின்றது. தொழிலில் போட்டி நிலவும் இக்காலத்தில் அதற்கேற்ற விதமாக தமது திறமையினை வளர்ப்பதும் வெளிப்படுத்துவதும் அவசியம்.
ஆறு:
நாட்டிலிருந்து வரும் போது தான் பெற்றுள்ள உயர் சான்றிதழ் ஒன்றினை எமது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலும் அடுத்து கத்தார் தூதுவராலயத்திலும் உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.
மேலும் சராதிகளாக இங்கு வர இருப்பவர்கள், வளைகுடா சாரதி அனுமதிப்பத்திரமுள்ளவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகின்றதென்பதை கவனத்திற்கொள்வதுடன்.
எமது நாட்டின் சாரதி அனுமதிப்பாத்திரங்கள் இங்கு செல்லுபடியாகாதென்பதையும், சாரதி பயிலும் பாடசாலைகளில் பயின்றே அனுமதிப்பத்திரம் பெற வேண்டுமென்பதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
இறுதியாக:
பல சிரமங்களையும் வேலை தேடி வருபவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டி வரும். வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான் என்பதை அனுபவ இரீதியாக உணர அவருக்கான சந்தர்ப்பமும் இருக்கின்றது. சில வேளை ஏன் வந்தேன் என்று தன்னை சுய விசாரணை செய்யக்கூடிய நிலமையும் ஏற்படும்.
உரிய தராதரங்களைப் பெற்றவர்கள் கத்தார் செல்ல வேண்டியேற்பட்டால், சுட்டிக்காட்டப்பட்ட தகவல்ளை கவனதிற்கொண்டு செயற்படும் போது, எதிர்நோக்கும் சில சிக்கல்களையாவது சமாளித்து உரிய பயனைப் பெற உதவியாக இருக்கும்.
நட்டிலிருக்கும் போது உரிய தொழிலினை உறுதி செய்து, வருபவர்கள் ஏற்படும் துயரங்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியுமென்பதையும் கவனத்திற்கொள்வது பொருத்தம்.
நன்றி-விடிவெள்ளி 27.03.2015
No comments:
Post a Comment