3 Jun 2014

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 2

நமது குழந்தைகளை வெற்றிகரமான மேதைகளாக உருவாக்குவதில் படைப்புத்திறன்,கற்பனைத்திறன்,அவர்களுக்கான சுதந்திரம் ஆகியவையே மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.ஒரு மேதை என்பவர் வெறுமனே விஷயங்களை எளிதாக புரிந்து கொள்பவர் அல்ல.அவர் தனக்கான  தனித்தன்மையை இந்த சமூகம் மற்றும் இந்த உலகிலிருந்து பெறுகிறார். எனவே, ஒரு குழந்தையின் படைப்புத்திறன் பெரியளவில் எழுச்சிப் பெறுவதற்கு, படைப்பாக்க ஆர்வம், கற்பனை மற்றும் சுதந்திரம் ஆகியவை அதற்கு கட்டாயம் தேவை.
படைப்புத்திறன் - Creative Skills.

படைப்புத்திறனுக்கான அடிப்படை தன்மையாக படைப்பாக்க ஆர்வம் திகழ்கிறது. படைப்புத்திறனை உங்கள் குழந்தையினுள் உருவாக்க, பலவித விஷயங்களைப் பற்றி கேள்விக் கேட்கும் பழக்கத்தை தூண்டுங்கள்.
குழந்தையானது, புதிய அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள். இதன்மூலம் அக்குழந்தைக்கு புதிய எண்ணங்கள் பிறக்கும்.ஒரு குழந்தை கேள்வி கேட்கும்போது, உங்களின் முழு கவனத்தையும் அதன்பால் செலுத்தவும். ஏனெனில் இதில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு பொதுவாக கற்றுத் தரப்படுகிறது. நாமும் அதைத்தான் அவர்களிடம் சொல்கிறோம். ஆனால் நாம் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் சிறுவர்களாக இருந்தபோது, நம்மை உதாசீனப்படுத்திய பெரியவர்களை நாம் விரும்பியிருக்கிறோமா? அல்லது மனதுக்குள் மதித்திருக்கிறோமா? எனவேதான், குழந்தைக்கான முக்கியத்துவத்தை நாம் நிச்சயம் வழங்கியாக வேண்டும்.மேலும் உங்கள் குழந்தையை வெளியே அழைத்துச் செல்லும்போது, கண்ணால் காணும் காட்சிகள் தொடர்பாக கேள்விகள் கேட்கலாம். (அந்த மனிதர் ஏன் செடிக்கு நீர் ஊற்றுகிறார், நின்று கொண்டிருந்த கார் எவ்வாறு ஓடியது, ஏன் கடை வைத்திருக்கிறார்கள்)
இதன்மூலம் சிந்தனைத்திறன் மேம்படும். ஏன், எதற்கு என்று யோசிப்பார்கள். அதற்கு விடைகாண முயல்வார்கள்.

கற்பனைத்திறன் - Imagination Skills

பள்ளியில் ஒரு குழந்தைக்கு, வரலாறு, புவியியல், சமூகவியல், அறிவியல், கணிதம் போன்ற பல பாடங்களைப் பற்றிய அம்சங்கள் பள்ளியில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றுடன் கற்பனைத்திறன் சேர்வது மிகவும் முக்கியம். கற்பனையற்ற அம்சங்கள் என்பவை பசுமையில்லாத தாவரங்களைப் போன்றவை. எனவே, பாடத்திட்டத்தில், ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் என்ற அம்சம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏ¦னினில், படைப்புத்திறனின் உயிநாடியாகஇந்த ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் திகழ்கிறது. உதாரணமாக, ஒரு விஞ்ஞானி ஒரு விஷயத்தை முதலில் கற்பனை செய்து, பின்னர் அதை நிஜமாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அது தோல்வியடையும்போது, மீண்டும் வேறொரு கற்பனையை மேற்கொண்டு, தனது முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த செயல்முறைதான் அனைத்து வகை துறைகளிலும் இருக்கிறது.
உங்கள் குழந்தையின் கற்பனை சமயத்தில் அபத்தமாகவும், தவறாகவும் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதற்காக அவர்களைத் திட்டுவது அதைவிட அபத்தமானது. ஏனெனில், இதன்மூலம் கற்பனை செய்யவே பிற்காலத்தில் குழந்தை பயப்படும். ஏனெனில் இதுபோன்ற கற்பனைகள்தான் வருங்காலத்தில் செம்மையான சிந்தனைகளாக மாறும்.அவர்களுக்கான சுதந்திரம் - Independence

ஒரு மேதைக்கு, சுதந்திரம் என்பது ஜீவ நீரைப் போன்றது. அந்த சுதந்திரத்திற்கு தடை ஏற்பட்டால், ஒரு இளம் மேதை தன்னை ஒரு நல்ல படைப்பாளியாக உருவாக்கிக் கொள்வதில் பலவிதமான சிக்கல்களை ஏற்படும். ஒரு வளரும் மேதைக்கு பெரியளவிலான புறக்கணிப்பு ஏற்படக்கூடாது. அப்போதுதான், அந்த மேதை இன்னும் புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். ஒரு இளம் மேதையின் சுதந்திரமானது, பெற்றோர் காட்டும் அன்பு மற்றும் ஆதரவில்தான் அடங்கியுள்ளது.
பழைய நடைமுறைகள் மற்றும் விதிகளை மீறினால்தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். அதுதான் உலக நியதி. எனவே, உங்கள் குழந்தை அந்த விதிகளை மீறினால், நீங்கள் அதிர்ச்சியடையாமல், ஆச்சர்யமடைந்து, உங்களின் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும்.

வறுமை என்பது ஒரு சிறு தடைதான். அதை மீறி சாதனை புரிந்தவர்கள் எத்தனையோ பேர். முறையான ஆதரவு, உற்சாகமளித்தல், திறமையை கண்டுகொண்டு உதவுதல், சுதந்திரம் அளித்தல், சோதனைகள் வந்தாலும் குழந்தையின் பக்கமே இருத்தல் போன்ற பலவித உதவிகள் கிடைக்காமல் காணாமல் போகும் மேதைகள்தான் அதிகம்!எனவே, அவர்களுள் ஒருவராக, உங்களின் குழந்தையும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்னும் வளருவோம்..

No comments:

Post a Comment